search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமூர்த்தி அணை"

    • கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
    • திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதை ஆதாரமாக கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 100 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2½ சுற்றுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அதே போன்று பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.

    அத்துடன் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணை மண் திட்டுக்களாகவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியும் வருகிறது. ஆனாலும் காண்டூர் கால்வாயின் உதவியால் பாசனத்திற்கு தண்ணீரும், அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்து வருகிறது. தற்போது முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்து 2-ம் சுற்றுக்காக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 36.31 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
    • நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது.
    • உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி., தொகுப்பு அணைகளின் கடைசியாக உள்ள இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    5 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் உடுமலை நகரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன.

    பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

    திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் 417 கன அடி, கால்வாயில் 65 கன அடி , நல்லாற்றில் 50 கன அடி, குடிநீருக்கு 21 கன அடி என மொத்தம் 555 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதேபோல கல்லாபுரம்- ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். அமராவதி அணை நீர்பாசன வசதி பெற மட்டுமின்றி கரூர் வரையிலான அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை ஆகியவற்றையும் நிறைவேற்றி வருகிறது. இந்த அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அமராவதி அணையில் இன்றைய நீர்மட்டம் 61.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 86 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், திருமூர்த்தி- அமராவதி அணைகள் நிரம்பவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தான் அணைகள் நிரம்பும். எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .
    • பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சுற்று தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது .இதை ஈடுகட்ட கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .இதை ஏற்று மேலும் 6 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிகளில் நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றவும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக வரும் 24ந் தேதி வரை 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 94.068 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
    • கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    உடுமலை : 

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன. அது தவிர அணையின் உயிர்நாடியாக அப்பர்நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகிறது.

    இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த கால்வாய் பரம்பிக்குளம் அணையில் தொடங்கி சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை கடந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பை பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.

    பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக்கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. இதனால் திருமூர்த்தி அணை மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் போதிய நீர்வரத்து கிடைக்காமல் தவித்து வந்தது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதியில் இருந்து காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பாசனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் நீர் ஆதாரங்கள் நீர்வரத்தை இழந்து தவித்து வருகிறது. இதனால் அணையில் நீர்இருப்பு உயர்ந்த பின்பு 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.
    • 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    உடுமலை:

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையின் கிழக்குப்பகுதியில் 300 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு மண் மேடாக காணப்படுகிறது.

    இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒரு டி.எம்.சி., வரை நீர் சேமிக்க முடிவதோடு பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மண் எடுத்தனர். கடந்த ஆண்டு சர்வே எண் 254ல், 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. பருவ மழை துவக்கம், பாசனத்திற்கு நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களினால் 17 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே மண் எடுக்கப்பட்டது. திருமூர்த்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் அதிக சத்துக்களுடன் காணப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே நடப்பாண்டும் கோடை காலத்தில் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புதிதாக சர்வே எண் குறிப்பிட்டு மண் எடுக்க அரசிதழில் அறிவிப்பு வெளியிடாமல் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

    அதிக அளவு விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த அளவு விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ந் தேதி முதல் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    திருமூர்த்தி அணையை கூடுதல் பரப்பளவில் ஆழப்படுத்தும் வகையில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, நடப்பாண்டு 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நீர் நிலைகளை தூர்வாரும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நடப்பாண்டு, குளங்களில் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமூர்த்தி அணையில் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கூடுதல் அனுமதி கோரி விவசாயிகள் விண்ணப்பித்ததால் மேலும் 38,800 கன மீட்டர் எடுக்கஅனுமதியளிக்கப்பட உள்ளது.

    தற்போது 54 விவசாயிகள் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. முதற்கட்டமாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலமாகஇருந்தால் 90 கன மீட்டர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மணலால் ஓரளவிற்கு ஆழம் அதிகரித்து நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
    • அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலை திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாததால் அதன் நீர்ப்பரப்பில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பருவமழை குறுக்கிட்ட காரணத்தினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி ஓரளவிற்கு ஆழமானது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.

    இதையடுத்து கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பெருத்த போராட்டத்துக்குப்பிறகு அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து அனுமதி அளித்து இருந்தால் அணையும் ஆழமாகி இருக்கும். அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கும்.

    அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். வண்டல் மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமண லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    குறிப்பாக அமாவாசை , பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர திருமூர்த்தி அணை வண்ண மீன் காட்சியகத்தை பார்வையிடவும் பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். டிசம்பர் மாதம் வரை நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறைந்து விடும்.

    கடந்த 2 மாதமாக தண்ணீரின்றி அணை வறண்டு கிடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

    நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும். வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அடிவாரத்தில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மண்டபத்தை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருமூர்த்தி அணையில் சென்று கலக்கும். வெள்ள அபாயத்தை அறிவிக்கும் வகையில் அப்பகுதியில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. மலையின் மீது கருமேகங்கள் திரண்டாலே கனமழையை கணித்து அருவிப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி ஆகும். பிஏபி பாசன தொகுப்பு அணைகளின் இது கடைசி அணையாகும் .இதன் மூலம் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது .உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன .தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் .அப்போது திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    தற்போது நீர் வரத்து இல்லாததால் தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. பிஏபி அணைகளின் தாய் அணையாக கருதப்படும் வால்பாறை சோலையார் அணையில் மொத்தமுள்ள 165 அடியில் வெறும் 22. 49 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13 .16 அடிக்கும் 170 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில் 67. 75 அடிக்கும் திருமூர்த்தி அணையில் 29. 19 அடிக்கும் மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

    திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது அதைவிட 5 அடி குறைவாக உள்ளது. நீர்வரத்து ஒரு கண அடியாக உள்ளது .27 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும். எனவே விரைவில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
    • 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளில் பிரதானமாக உடுமலை திருமூர்த்தி அணை உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.

    பிரதான கால்வாய்க்கு நீர் திறக்கும் 3 மதகுகள், தளி கால்வாய், 1 மதகு, தற்போது முழுவதுமாக மேலே ஏற்றப்பட்டு ரப்பர் பீடிங், துருப்பிடித்திருந்த இணைப்புகள், போல்ட்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் பழுது காரணமாக நீர்க்கசிவு அதிகளவு காணப்பட்டது. 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரும்பு மதகுகளில் உள்ள பழுது நீக்கப்பட்டு நான்கு புறமும் ரப்பர் ஷீட் புதிதாக பொருத்தப்பட்டு பெயிண்ட் அடித்து மீண்டும் கீழே இறக்கப்படும். இதனால் முழுவதுமாக நீர்க்கசிவு தடுக்கப்படும் என்றனர்.

    • உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது
    • 1990ல் படகு சவாரி தொடங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் தளி பேரூராட்சி சார்பில் 1990ல் படகு சவாரி தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2002ல், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.அதன்படி படகுத்துறையில் 5 படகுகள் இயக்கப்பட்டு, பெரியவர்களுக்கு 25 ரூபாய், சிறியவர்களுக்கு 15 ரூபாய், நான்கு நபர் பயணிக்கும் கால்மிதி படகில் செல்ல அரைமணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதற்கு சுற்றுலாப்பயணிகளிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக படகு சவாரி முற்றிலுமாக முடங்கிஉள்ளது.இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

    படிப்படியாக சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அப்பகுதியில் முற்றிலுமாக குறைந்து விடுமுறை நாட்களில் கூட திருமூர்த்தி அணைப்பகுதி வெறிச்சோடுகிறது. இயக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட, படகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது. படகுகளை புதுப்பிக்க செலவிட்ட தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் செலுத்த முடியாததும், படகு சவாரி முடங்க முக்கிய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே தமிழக அரசு சுற்றுலா பயணிகள் தேவைக்காக படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வரும் கோடை காலத்தில் படகுகளை இயக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை, தளி பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
    • 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி. திட்டத்தின் கீழ் 3ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு பு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பிஏபி. பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

    இந்நிலையில் 3ம் மண்டல பாசனத்துக்கு டிசம்பா் 28ல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழிசெல்வராஜ் ஆகியோா் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி அணையில் இருந்து நீரை திறந்துவைத்தனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வீனீத், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    நீா் திறப்பின் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 19,781 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 3020 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 13,428 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,763 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 18,963 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என ஆக மொத்தம் 94 ஆயிரத்து 362 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீா் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறுகையில்,

    பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாயில் இருந்து முதல்கட்டமாக 250 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு ள்ளது. இது படிப்படியாக 912 கன அடியாக உயா்த்தப்படும். டிசம்பா் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரை 120 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு மொத்தம் 4 சுற்றுகளாக 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

    ×